கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நித்யானந்தாவுக்கு விலக்கு
சென்னை: சாமியார் நித்யானந்தாவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராக விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2011-ம் ஆண்டு நித்தியானந்தா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி வேற்று மதத்தை சார்ந்தவர். தனது மனைவியை இந்து மதத்தை சேர்ந்தவராக தேர்ந்தெடுக்க முடியவில்லை. இந்த நிலையில் அவர் எப்படி இந்து மதத்தை காப்பாற்றுவார் என பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி தலைர் அர்ஜூன் சம்பத் கோவை நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு கடந்த கடந்த 2011ஆம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் செப்டம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கடந்த மாதம் 28-ஆம் தேதி கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவதூறு வழக்கில் நேரில் ஆஜாரவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என நித்யானந்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஜி.பாலா, டெய்சி ஆஜராகி, மனுதாரர் எந்தத் தவறும் செய்யவில்லை. அதற்கான எந்த ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை ஆதாரமாக எடுக்க முடியாது என வாதாடினர்.
மனுவை விசாரித்த நீதிபதி, கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நித்யானந்தாவுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார்.