உயிரென்றால் விளையாட்டாப் போச்சா.. தமிழக அரசு அதிகாரிகளுக்கு ஹைகோர்ட் விளாசல்
பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதை அரசு அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
மதுரை: சிவகாசி பட்டாசு விபத்தில் 9 பேர் பலியான வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் விசாரணை அமைய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பட்டாசு நகரமான சிவகாசி தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வந்த போது, நாராணாபுரம் சாலையில் ஆனந்த்ராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கிற்கு 2 வேன்களில் கொண்டு வரப்பட்ட பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறின.
கறும்புகையில் சிக்கி மரணம்
பட்டாசுகள் வெடிக்கவே தீ மளமளவென பரவியது. பட்டாசு கிடங்கிற்கு அருகில் தேவகி ஸ்கேன் ஸ்கேன் மையத்துக்குள் கரும்புகை பரவியது. பயந்து போன பலரும் கதவை மூடிக்கொண்டு ஸ்கேன் சென்டருக்குள் அடைபட்டனர். புகை அதிகரிக்க அதிகரிக்க பலரும் சுவாசிக்க முடியாமல் திணறினர். இதில் 6 பெண்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எரிந்த வாகனங்கள்
இந்த தீ விபத்தில் ஸ்கேன் சென்டர் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் எரிந்து கரிக்கட்டையானது. விபத்து நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் எரிந்து போன வாகனங்கள் எலும்பு கூடுகளாய் நிற்கின்றன. ஆனால் விபத்திற்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் கேள்வியாக உள்ளது.
2 பேர் கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக, பட்டாசு கடையின் கட்டட உரிமையாளர் சுதந்திரராஜன், கடை உரிமையாளர்கள் செண்பகராஜன், ஆனந்த் மற்றும் வாகனத்திலிருந்து பட்டாசுகளை இறக்கிய 3 தொழிலாளர்கள் என மொத்தம் 6 பேர் மீது, சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இந்நிலையில் பட்டாசுக் கடையை குத்தகைக்கு எடுத்த செண்பகராமன் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறும் போது பதறுவதும் அதன் பின்னர் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
சிவகாசி பட்டாசு குடோன் விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இந்த வழக்கில், பட்டாசு குடோன் அமைக்கப்பட்டதில் உள்ள விதிமீறல் மற்றும் விபத்து குறித்து விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் இணை அதிகாரி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மக்களின் உயிரோடு விளையாடுவதை அரசு அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
நீதிபதிகள் அதிருப்தி
இதனிடையே இன்று பட்டாசு விபத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதில் நீதிமன்றம் தோல்வியடைந்து விட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் விசாரணை அமைய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.