மாற்றுத்திறனாளி ஆசிரியர் வழக்கு.. தமிழக அரசுக்கு ரூ. 10,000 அபராதம்... 2வது முறையாக விதித்த ஹைகோர்ட்
சென்னை: ஆசிரியர்கள் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை ஹைகோர்ட்.
ஆசிரியர் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கோரி, பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கத் தலைவர் சொக்கலிங்கம் சார்பில் ஹைகோர்ட்டில் மனு ஒன்று போடப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு உள்ளதா என பதில் தர கோர்ட் உத்தரவிட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத் திறனாளிக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கில் உயர்கல்வித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யாததால் தமிழக அரசுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து இரண்டு வாரத்தில் அரசு பதில் அளிக்க வேண்டும் எனவும் ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் இரண்டாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.