ராமஜெயம் கொலை வழக்கு: குற்றவாளிகளை 3 மாதத்தில் கண்டறிய சி.பி.சி.ஐ.டி.க்கு கோர்ட் உத்தரவு!
மதுரை: தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு 3 மாதம் காலஅவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நேருவின் தம்பி ராமஜெயம் கொலை தமிழகத்தையே உலுக்கியது. கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் திருச்சி காவிரி ஆற்றின் கரையில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
ஆனால் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் ராமஜெயத்தை கொலை செய்த குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், ராமஜெயத்தின் மனைவி லதா சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் முன்னேற்றம் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் கேள்வி எழுப்பியது.
அதற்கு பதில் அளித்த சி.பி.சி.ஐ.டிபோலீஸார் வழக்கு முக்கிய கட்டங்களை எட்டியுள்ளதாகவும், குற்றவாளிகளை பிடிப்பதற்கு கால அவகாசம் அளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து வழக்கை வரும் ஜூன் மாதம் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னைஉயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.