மதுரை சுற்றுச்சாலை சுங்க வரிவசூல் திடீர் நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை ரிங்ரோட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வசூல் செய்யப்பட்ட வாகன சுங்க வரி கட்டண வசூலை வியாழக்கிழமை முதல் நிறுத்தி வைத்துள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
மதுரை உள்வட்ட சுற்றுச்சாலை சுங்க வரி வசூல் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை- திருமங்கலம் சுற்றுச்சாலையில் 2005 ஆம் ஆண்டு முதல் முதல் 2010 ஆம் ஆண்டு வரை வசூலித்த சுங்கக் கட்டணத்தை திரும்ப வழங்கக்கோரி மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் வசூலிப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். அவ்வாறு அறிவிப்பு வெளியிடாமல் 2005 முதல் 2010 ஆம் ஆண்டு வரை சுங்கக்கட்டணம் வசூலித்ததாக அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தவழக்கை விசாரித்த தனி நீதிபதி, முன் அறிவிப்பு இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலித்தது சட்டவிரோதம் என உத்தரவிட்டது. ஆனால், ஏற்கெனவே வசூலித்த கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவிட மறுத்துவிட்டது.
மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து பேருந்து உரிமையாளர்கள் சங்கம், மாநகராட்சி ஆகிய இரு தரப்பினரும் மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். கட்டணம் வசூலித்தது சட்டவிரோதம் எனில் பணத்தை திரும்ப வழங்குவது தான் முறை என பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், ஏற்கெனவே 2000 ஆம் ஆண்டு அரசு உத்தரவுப்படி 15 ஆண்டுகளுக்கு கட்டணம் மற்றும் கூடுதல்கட்டணம் வசூலிக்க அனுமதி பெறப்பட்டுள்ளதால் கூடுதல் கட்டண வசூல் சட்டவிரோதம் ஆகாது மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் கேள்வி
இம்மனுக்கள் நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநகராட்சி வழக்கறிஞரிடம் நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை ஏன் பின்பற்றவில்லை என கேள்வி எழுப்பினர். சுற்றுச்சாலை அமைக்க எவ்வளவு கடன் பெறப்பட்டது, அதில் எவ்வளவு தொகை திரும்பச் செலுத்தப்பட்டது, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலித்தால் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியும் என்பது போன்ற விவரங்களை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முன்பு அறிவிப்பாக வெளியிட வேண்டும்.
நேரில் ஆஜராக உத்தரவு
கடன் தொகையை செலுத்தி முடிக்காதிருந்தால் 1.11.2014 முதல் 31.10.2015 வரை வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சுங்கக்கட்டணம் எவ்வளவு என்பதை அறிவிப்பாக 6 வாரத்தில் வெளியிட வேண்டும் என்று கடந்த 5.11.2014 அன்று தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ஏன் செயல்படுத்தவில்லை எனக் கேட்ட நீதிபதிகள், இது குறித்து பிப்ரவரி 4 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
சுங்கவரி வசூல் நிறுத்தம்
மதுரை-திருமங்கலம் சுற்றுச்சாலையில் உள்ள மாநகராட்சி சுங்கச்சாவடிகளில் வியாழக்கிழமை திடீரென சுங்கவசூல் நிறுத்தப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி, மதுரை மாநகராட்சி உள்வட்ட சுற்றுச்சாலையில், அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யப்பட்ட சுங்கவரிகள் ஜனவரி 22ஆம் தேதி முதல் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. அரசிடமிருந்து உரிய ஆணை பெற்ற பிறகு சுங்கவரி கட்டணம் வசூலிக்கப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.