ஆடி கார் விபத்து வழக்கு: நீண்ட போராட்டத்திற்குப் பின் ஐஸ்வர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் 2 வாரத்துக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி ஐஸ்வர்யா கையெழுத்திட உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
சென்னை தரமணி அருகே கடந்த மாதம் 2ம் தேதி அதிகாலை குடிபோதையில் ஆடி காரை ஒட்டி வந்த மூன்று பெண்கள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது பயங்கரமாக மோதினர். இந்த சம்பவத்தில் முனுசாமி ,48 என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆடி காரை இயக்கி வந்த பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா என்றும் அவர் தொழில் அதிபரின் மகள் என்றும் தெரிய வந்தது. இதனையடுத்து, ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
முதலில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்தார். ஆனால் நேரடியாக இங்கு வரக் கூடாது என்று மனு தள்ளுபடியானது. இதையடுத்து சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டை அணுகினார். அங்கு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடினார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அவர் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவே மது அருந்தியதாக ஐஸ்வர்யா தரப்பிலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே மருந்து அருந்தியதற்கான ஆதாரம் இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞரும் வாதாடினர்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தார். இன்று ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிண்டியில் 2 வாரத்துக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி ஐஸ்வர்யா கையெழுத்திட உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.