அம்ருதா வழக்கு விசாரணைக்கு ஏற்றதா? - தலைமை செயலர், கமிஷனருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
ஜெயலலிதாவின் வாரிசு என்று அறிவிக்க கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதா என்று பதிலளிக்க கோரி தலைமை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அம்ருதா வழக்கை விசாரிக்கலாமா? என்று ஜனவரி 5ஆம் தேதிக்குள் தலைமை செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க கோரி சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அம்மா என்று அழைத்தவர்கள், இப்போது ஜெயலலிதா என்று கூறுகின்றனர் என்று அம்ருதா வழக்கை விசாரித்த ஹைகோர்ட் நிதிபதி வைத்தியநாதன் வேதனையுடன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மகள் என்று கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இதனையடுத்து அம்ருதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ்
ஆஜராகினர். அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகினர்.
அம்ருதா வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அரசு தரப்பு வழக்கறிஞர் விஜயநாராயணன்வாதிட்டார். மேலும் டிஎன்ஏ முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இறந்தவர்களுக்கும் தனிப்பட்ட அந்தரங்க சுதந்திரம் உள்ளது என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
விளம்பர நோக்குடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் வாதிட்டார்.
இதனையடுத்து அம்ருதா தரப்பு வழக்கறிஞர் பிரகாஷ் வாதிட்டார். ஜெயலலிதா தான் தனது தாய் என நிரூபிக்க அம்ருதாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். மேலும் தீபா மற்றும் தீபக்கை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க அம்ருதா கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் ஜெயலலிதா மகள் என்று கோரி அம்ருதா தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு ஏற்றதா என்று பதிலளிக்கக் கோரி தலைமை செயலாளர், சென்னை காவல்துறை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.