ஜெ.வீட்டை நினைவிடமாக்குவதற்கு தடை கோரி தீபா வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக்குவது குறித்து அக்டோபர் 23ஆம் தேதிக்குள் அரசு பதிலளிக்க கோரி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக்குவதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் நாங்கள்தான், எனவே போயஸ்கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்றக்கோரிய அரசின் உத்தரவை ரத்து செய்யுங்கள் என்று தீபா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
எனது பாட்டி சந்தியா போயஸ் கார்டனில் வேதா நிலையம் என்ற வீட்டை விலைக்கு வாங்கினார். அந்த வீட்டில் தான் எனது தந்தை ஜெயராமனும், அத்தை ஜெயலலிதாவும் வசித்தனர்.
பாட்டியின் மறைவுக்கு பிறகு இந்த வீடு அத்தை ஜெயலலிதா பெயருக்கு மாற்றப்பட்டது. நானும் எனது தம்பி தீபக்கும் படிப்புக்கு தி.நகர் வீட்டுக்கு குடியேறினோம். இந்த நிலையில் எனது அத்தை ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். அவருக்கு நானும், எனது தம்பி தீபக்கும்தான் நேரடி வாரிசுகள்.
அத்தை ஜெயலலிதா உயிரோடு இருந்த போது போயஸ் கார்டன், கொடநாடு, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார். இந்த சொத்துக்கள் எல்லாம் எனக்கும், தம்பி தீபக்குக்கும்தான் சொந்தம்.
இந்த நிலையில் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து முதல்வர்,தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்தேன்.
எனது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. எனவே ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அறிவித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் தீபா.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது மனுவை விசாரித்த நீதிபதிகளிடம் அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் 23ஆம் தேதிக்குள் தலைமைச் செயலர் பதிலளிக்க வேண்டும் என்று கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.