மரக்காணம் கலவரம்- பாமக வழக்கில் ஜெயலலிதா, அரசு அதிகாரிகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: மரக்காணம் கலவரத்துக்கு பின் பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்ய அரசு நிர்வாகம் தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் மணி கூறியிருந்ததாவது:
வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி சித்திரை முழுநிலவு இளைஞர்கள் பெருவிழா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் வாகனங்களை, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மரக்காணத்துக்கு அருகே வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதில் எங்கள் கட்சியை சேர்ந்த இருவர் இறந்தனர்.
ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காமல், பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மீது பொதுச்சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட கோரி விழுப்புரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் 2013-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு முதலில் அனுமதி வழங்கிய போலீசார், பின்னர் முன் அறிவிப்பு இல்லாமல் அனுமதியை ரத்து செய்தனர்.
8 ஆயிரம் வழக்குகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன்பின்னர் பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
பா.ம.க.வினர் மீது 8 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜெ.குரு உட்பட 134 பேர் தேசிய பாதுகாப்பு மற்றும் குண்டர் தடுப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை திருவிழாவில், ஆளும் கட்சியினரை விமர்சனம் செய்து நடத்திய நாடகத்தை ஜீரணிக்க முடியவில்லை என்பதால் பா.ம.க.வினர் மீது இப்படி பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அரசு நிர்வாகம் தவறாக பயன்படுத்தப்பட்டது.
எனவே 2013-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடந்த சம்பவங்கள், பா.ம.க.வினர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகள், அரசு நிர்வாகத்தை எவ்வாறு ஆளும் கட்சியினர் தவறாக பயன்படுத்தினர் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஜி.கே. மணி அதில் கூறியிருந்தார்.
இம்மனுவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 6-வது எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இம்மனுவுக்கு தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., அ.தி.மு.க. பொதுச் செயலாள் ஜெயலலிதா மற்றும் அரசு அதிகாரிகள் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.