நீதிபதிகள் மீது விமர்சனம்: கவிஞர் வைரமுத்து ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: நீதிபதிகளை விமர்சனம் செய்த வழக்கில் கவிஞர் வைரமுத்து 4 வாரத்துக்குள் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் கடந்த மாதம் 12-ந் தேதி மறைந்த நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, சமூகத்தை நீதிமன்றம் கவனிப்பதைப்போல, நீதிமன்றத்தை சமூகம் கவனிக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. நீதிபதி ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நல்லபெயரை பெற்றுக்கொண்டு, ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு விலைபோவதை ஏற்க முடியவில்லை. நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை ஆகிய 4 துறைகளும் களங்கம் ஏற்படாமல் இருந்தால் தான் சமூகம் மேம்படும் என நீதித்துறை குறித்து பேசினார்.
இந்த பேச்சு நீதிமன்றத்தை அவமதிப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சினிமா ஃபைனான்சியர் முகுன் சந்த் போத்ரா மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், நீதித்துறை, நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்த வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் அக்னி கோத்திரி, கே.கே. சசிதரன் ஆகியோர் வழக்கை பட்டியலிட கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அப்போது, இவ்வழக்கில் வைரமுத்து 4 வாரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.