சினிமா பைனான்ஸியர் போத்ரா வழக்கு... ரஜினிக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
கஸ்தூரி ராஜா கடன் வாங்கிய விவகாரத்தில் ரஜினியை விடாமல் துரத்தி வருகிறார் பைனான்ஸியர் போத்ரா. உயர்நீதிமன்றத்தில் போத்ரா தொடர்ந்த அப்பீல் வழக்கில் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கில் நடிகர் ரஜினிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
போத்ராவின் வழக்கை ஜார்ஜ் டவுன் கோர்ட் தள்ளுபடி செய்தது. தள்ளுபடியை எதிர்த்து போத்ரா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் ரஜினிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையை சேர்ந்த பைனான்சியர் எஸ்.முகுன்சந்த் போத்ரா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
இயக்குனர் கஸ்தூரிராஜா, 2012ம் ஆண்டு என்னிடம் கடன் வாங்கினார். அப்போது, நான் பணம் தரவில்லையென்றாலும், என் சம்பந்தி ரஜினிகாந்த் திருப்பிக்கொடுத்து விடுவார் என்று எழுதிக் கொடுத்து பணத்தை வாங்கினார். பின்னர், கடன் தொகையை காசோலையாகத் திருப்பிக் கொடுத்தார். அந்த காசோலை வங்கி கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது.
இதையடுத்து அவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தேன். பின்னர், ரஜினி வீட்டை தொடர்புக் கொண்டு விவரம் சொன்னபோது, பல பேர் அவர் பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர் என்று பதில் வந்தது.
இதனால், 2012ம் ஆண்டு ரஜினியின் பெயரை சொல்லி மோசடி செய்து விட்டார் என்று கஸ்தூரிராஜாவுக்கு எதிராக போலீசில் புகார் செய்தேன். போலீசார், இது சிவில் பிரச்னை என்று கூறி விட்டனர்.
இதற்கிடையில், மேன் ஹூன் ரஜினிகாந்த் என்ற படத்துக்கு தடை கேட்டு ரஜினி வழக்கு தொடர்ந்தபோது, தன் பெயரை பயன்படுத்த யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த பதிலை முன்பே அவர் தெரிவித்து இருந்தால், கஸ்தூரிராஜா மீது நான் கொடுத்த புகாரை சிவில் பிரச்னை என்று போலீசார் கூறியிருக்க மாட்டார்கள்.
இதுவரை கஸ்தூரிராஜா மீது ரஜினிகாந்த் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். இதனால், ரஜினிகாந்தும், கஸ்தூரிராஜாவும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, தன் பெயரை தவறாகப் பயன்படுத்திய சம்பந்தி கஸ்தூரிராஜா மீது நடவடிக்கை எடுக்க, ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில் கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக மனுதாரர் தொடர்ந்த செக் மோசடி வழக்கை ஏற்கனவே ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. எனவே, வேண்டுமென்றே எனக்கு எதிராக இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார். இதனால், என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனிடையே போத்ரா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.