நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் சந்தேகம் அளிக்கின்றன : முத்தரசன், விஜயகாந்த் கேள்வி
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் சந்தேகம் அளிக்கின்றன என்று முத்தரசன், விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை : பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலாலின் செயல்பாடுகள் சந்தேகம் அளிக்கின்றன. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை என்றும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசிய ஆடியோ தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஆளுநர் அளித்த விளக்கம் ஏற்கும்படி இல்லையென்றும் தமிழக அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
ஆளுநர் மீது சந்தேகம்
இதுகுறித்து சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி கல்வித்துறையில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பெயர்களை குறிப்பிட்டு பேசியுள்ளார். அதே சமயம், இச்சம்பவத்தில் ஆளுநர் அவசரமாக விசாரணைக்குழு அமைக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தன்னிலை விளக்கமளிக்கிறார். இப்பிரச்னையில் ஆளுநரே சந்தேகிக்கப்படுகிறார். எனவே, அவரே விசாரணைக்குழு அமைப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.
உயர்நீதிமன்ற நீதிபதி
தமிழகத்தில் இந்த பிரச்னை பல்வேறு கல்லூரிகளில் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதே சமயம் காவிரி நதி நீர் பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் தமிழகத்திற்கு துரோகங்கள் இழைத்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
நிர்மலா தேவி பிண்ணனி
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுகையில், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நிர்மலாதேவி அவ்வளவு தைரியமாக செயல்பட்டதன் மூலம் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பின்னணியில் இருக்கிறார்கள் என சந்தேகிக்கத் தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் நடவடிக்கை
ஆளுநர் தாமாக முன்வந்து நிர்மலாதேவியை பார்த்ததில்லை என்பது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழியை நினைவூட்டுவதாகவும், பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தொட்டது அநாகரிகத்தின் உச்சகட்டம் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆதரவில் உள்ள ஆளுநரே சந்தேக வளையத்துக்குள் இருப்பதால் நீதிமன்றம் தாமாக முன்வந்து நேர்மையான அதிகாரிகள் மூலம் விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.