மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கும் மத்திய பாதுகாப்புப் படை- இன்று முதல் அமல்
மதுரை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று முதல் மத்திய பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான பெஞ்ச் மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை அமல்படுத்த உத்தரவிட்டது.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று முதல் மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது.
இதற்காக 200 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மதுரை கிளைக்கு நேற்று வருகை தந்தனர். இந்த பாதுகாப்புப் படையினரின் சோதனைக்குப் பிறகே நீதிமன்றப் பகுதிக்குள் எவரும் செல்ல முடியும்.
தனி அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே நீதிமன்ற பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நீதிமன்றத்தைச் சுற்றிலும் தொழில் பாதுகாப்பு படையினர் இருசக்கர வாகனம் மற்றும் ஜீப்களில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புக்காக தமிழக அரசு ரூ80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. நீதிமன்றத்தின் வெளிப்பகுதிகளில், மதுரை மாநகர காவல்துறையினரின் கண்காணிப்பு வழக்கம்போல இருக்கும்.