பணிப்பெண்கள் புகார்.. சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்த ஹைகோர்ட்
மார்ச் 17ம் தேதிவரை சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவரை கைது செய்ய தடை விதித்து, நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார்.
மதுரை: சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவரை வரும் 17ம் தேதிவரை கைது செய்ய மதுரை ஹைகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்து்ள்ளது.
அதிமுக எம்பி சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அவரது வீட்டில் வேலை பார்த்த திருநெல்வேலி மாவட்டம், ஆனைகுடியை சேர்ந்த பானுமதி, தங்கை ஜான்சிராணி ஆகியோர் பாலியல் புகார் கொடுத்தனர். இந்த புகாரை திரும்ப பெறுவதாக இருவரும், தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு மனு அனுப்பினர். இதற்கிடையே பானுமதி கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
புகாரை திரும்ப பெற சசிகலா புஷ்பா தரப்பில் மிரட்டப்பட்டதாகவும் பானுமதி புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் சசிகலா புஷ்பா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் தரப்பில் ஹைகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 17ம் தேதிவரை சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவரை கைது செய்ய தடை விதித்து, நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார்.