மனிதர்கள் வாழத் தகுந்த இடமா தனுஷ்கோடி? நீதிபதிகள் குழு ஆய்வு
கடலால் அழிந்த தனுஷ்கோடி மனிதர்கள் வாழ தகுந்த இடம்தானா? என்பது குறித்து நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
ராமேஸ்வரம்: கடலால் அழிந்த தனுஷ்கோடி மனிதர்கள் வாழ தகுந்த இடம்தானா? என்பதை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆய்வு செய்தனர்.
1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி, தனுஷ்கோடியை பயங்கர புயல் தாக்கியது. இதில் 1,500 பேர் பலியானார்கள்.
ராமேஸ்வரத்தில், புயலின் வேகம் கடுமையாக இருந்தது. கடல் அலையும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பொங்கி எழுந்ததில் தனுஷ்கோடி நகரம் மூழ்கி சின்னாபின்னமானது.
அழிந்த தனுஷ்கோடி
தனுஷ்கோடியில் ரயில் நிலையம், கோயில், வீடு, கடைகள் என அனைத்தையும் கடல் காவு கொண்டது. இதனால் அந்த இடம் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக அறிவிக்கப்பட்டது.
வாழ தகுதியான இடமா?
இந்நிலையில் தனுஷ்கோடியில் அடிப்படை வசதிகளை செய்தால் அந்த இடம் வாழ தகுதியான இடமா? என்று வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தனுஷ்கோடி வாழத் தகுந்த இடமா? என நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.
பாம்பன் பாலத்திலும் ஆய்வு
இதையடுத்து பாம்பன் பாலத்தில் முதலில் நீதிபதிகள் ஆய்வு செய்தனர். பாம்பன் பாலத்தில் கடந்த ஆண்டு போடப்பட்ட ரப்பர் சாலை பெயர்ந்தது.
100-வது விபத்து
இதனால் ஏராளமான விபத்துகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பாலத்தில் 100-ஆவது விபத்து நடந்தது. அப்போது பொதுமக்கள் கேக் வெட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தற்போது பாம்பன் பாலம் போக்குவரத்துக்கு உகந்ததா எனவும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்,
தனுஷ்கோடி
இதையடுத்து தனுஷ்கோடிக்கு நீதிபதிகள் சென்றனர். அந்த இடம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியான இடம்தானா? என அவர்கள் ஆய்வு செய்தனர்.