மதுரை மாநகராட்சி முன்பு ஆர்பாட்டம் நடத்த திமுகவிற்கு அனுமதியில்லை – ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: மதுரை மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி அளித்த தனிநீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. மாநகர போலீசார் பரிந்துரை செய்துள்ள இடங்களில் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்றும் உத்தரவிட்டது
தரமற்ற சாலைகள், குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதி குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு அக்டோபர் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக திட்டமிட்டிருந்தது.
இதற்கானஅனுமதி கோரிய மனுவைப் போலீஸார் நிராகரித்த நிலையில், போலீசாரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலர் பி.மூர்த்தி மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தார். இதை எதிர்த்து மாநகரக் காவல் உதவி ஆணையர் (தல்லாகுளம்) காந்திமதிநாதன் மேல்முறையீடு செய்தார். அதையடுத்து திமுக ஆர்ப்பாட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மதுரை மாநகரக் காவல் துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா நேரில் ஆஜராகி, ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினரால் அனுமதிக்கப்படும் இடங்கள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தார். செல்லூர் 50 அடி சாலை, வேங்கடபதி நகர், முனிச்சாலை, ஸ்காட் ரோடு தலைமை தபால் நிலையம், ஆறுமுச்சந்தி, காளவாசல் சந்திப்பு, ஏ.ஜி.சுப்புராமன் தெரு, துளசிராம் நகர், மீனாட்சி நகர், அனுப்பானடி, பொன்னுபிள்ளைத் தெரு, ஹார்விபட்டி, திருநகர், எஸ்.ஆலங்குளம், விளாங்குடி, சங்கீத் நகர் உள்ளிட்ட 16 இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். மேலும் மனுதாரர்கள் காவல் துறையால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 16 இடங்களில் ஒன்றைத் தேர்வு செய்து, அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரலாம் என்றும் உத்தரவிட்டனர்.