24 ஆண்டு சிறைவாசம்... விடுதலை செய்ய கோரிய நளினி மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் தம்மை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி தற்போது வேலூர் சிறையில் உள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 1998-ஆம் ஆண்டு நளினிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
பின்னர் தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு, அரசியலமைப்பு சட்டம் 161-ன் படி, நளினிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்த 2,200 ஆயுள்தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. இதே அடிப்படையில், கடந்த 24 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக
அரசுக்கு கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடிதம் ஒன்றை அனுப்பினார். ஆனால் தமிழக அரசு அவரது கடிதத்திற்கு பதில் ஏதும் கூறவில்லை.
இதையடுத்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஆயுள்தண்டனை கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்னதாகவே விடுதலை செய்ததைப் போல, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள தன்னையும் விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபிதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, இதுகுறித்து தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும், வழக்கு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.