33 அடி சாலையை அப்படியே லவட்டப் பார்த்து சிக்கலில் மாட்டிய நடிகர் சங்கம்!
சென்னை தி.நகரில் பொது இடமான 33 அடியை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது சிக்கலை சந்தித்துள்ளது நடிகர் சங்கம்.
சென்னை: சென்னை தி.நகரில் பொது இடமான 33 அடியை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து தற்போது சிக்கலில் மாட்டியுள்ளது நடிகர் சங்கம்.
சென்னை தி நகர் வித்யோதயா காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில் சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலை பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல பொது இடத்தை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இதனால் வித்யோதயா காலனி மக்கள் பிரகாசம் சாலைக்கு செல்ல வேண்டுமென்றால் வேறு வழியின்றி சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும். மேலும் அந்த சாலையை அதிகாரிகள் சட்டவிரோதமாக நடிகர் சங்கத்துக்கு பட்டா பதிவும் செய்துள்ளனர்.
பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் கட்டடத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் முன்பு நடைபெற்றது. இது தொடர்பாக பதிலளிக்க நடிகர் சங்கம், சிஎம்டிஏ, மாநகராட்சி ஆகியவற்றுக்கு நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் இன்று அந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் நடிகர் சங்க கட்டடத்தை ஆய்வு செய்ய ஆணையரை நியமிக்க உத்தரவிடுவதாகவும், அவர் அறிக்கை தாக்கல் செய்யும் வரை இந்த கட்டடத்துக்கு இடைக்கால தடை விதித்ததோடு வழக்கு விசாரணையை ஜூன் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கியச் சாலையை இப்படி புறம்போக்கு போல ஆக்கிரமிப்பு செய்யப் போய் சிக்கலில் மாட்டியுள்ளது நடிகர் சங்கம். மக்களுக்காக நடிகர்களா அல்லது நடிகர்களுக்காக மக்களா என்ற கேள்வியும் இதன் மூலம் எழுந்துள்ளது.