ஆர்.கே.நகரில் 1947 போலி வாக்காளர்களை நீக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
ஆர்கே நகரில் 1947 போலி வாக்காளர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகரில் 1947 போலி வாக்காளர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் திமுகவின் செயல்பாடுகளை சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டியும் உள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 45,000க்கும் அதிகமான போலி வாக்காளர்கள் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், 40,000 போலி வாக்காளர்களை நீக்கிவிட்டதாக தெரிவித்தது. ஆனால் திமுக மீண்டும் 5117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
இந்த விசாரணையின் போது 1947 இரட்டை பதிவு வாக்காளர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அவர்கள் தேர்தலில் வாக்களிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் கூறியது. இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், எஞ்சிய 1947 போலி வாக்காளர்களையும் உடனே நீக்க உத்தரவிட்டது.
அத்துடன் போலி வாக்காளர்களை நீக்கும் விவகாரத்தில் திமுக அக்கறையுடன் செயல்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டும் தெரிவித்துள்ளது.