குடியிருப்பு பகுதிகளில் ஒரு மதுக் கடையும் இருக்கக் கூடாது.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
குடியிருப்பு பகுதிகளில் இருந்து எத்தனை மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: குடியிருப்பு பகுதிகளில் ஒரு மதுக் கடையும் இருக்கக் கூடாது. அங்கிருந்து மாற்றி அமைக்கப்பட்ட மதுக்கடைகள் எத்தனை என்று 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் உள்ள குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பிரசன்னா உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் பிரசன்னாவுக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்தும் சிறைத்துறை வழங்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான பெஞ்ச் இன்று அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தது.
21 பேர் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், அனைவரையும் இன்று மாலைக்குள் விடுவிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர்.
அத்தோடு குடியிருப்புப் பகுதிகளில் மதுக் கடைகள் இருக்கக் கூடாது என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், குடியிருப்பு பகுதிகளில் இருந்து மாற்றி அமைக்கப்பட்ட மதுக்கடைகள் எத்தனை என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.