இளவரசன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த 100 பேருக்கு மட்டும் அனுமதி- அரசியல்வாதிகள் வரக் கூடாது!
சென்னை: தர்மபுரி இளவரசனின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் இளவரசனின் தந்தை உள்பட 100 பேருக்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு அனுமதி கிடையாது என்றும் அது தெரிவித்துள்ளது.
தருமபுரி இளவரசனின் முதலாவது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கோரி அவரது தந்தை டி. இளங்கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி எனது மகன் இளவரசன் மர்மமான முறையில் உயிரிழந்தான். போலீஸ் தரப்பில் அது தற்கொலை என வழக்குப் பதிவு செய்யப் பட்டது.
இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் எனது மகன் இறந்து ஜூலை 4-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இளவரசனின் நினைவு தினத்தில் அவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எனது குடும்பத்தினர், அவனது நண்பர்கள், கிராம மக்கள் உள்பட பலர் விருப்பம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர், ஆர்டிஓ ஆகியோரிடம் விண்ணப்பித்தோம். ஆனால், அவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். எனவே, எனது மகனின் முதாலவது ஆண்டு நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஆர்டிஓ பரிசீலனை செய்து அனுமதிக்க வேண்டும். அதில், மனுதாரர், அவரது குடும்ப உறுப்பினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நல விரும்பிகள் ஆகியோரில் 50 பேரை ஜூலை 4-ஆம் தேதி மாலை 3 முதல் 4 மணி வரை அனுமதிக்க வேண்டும். மேலும், கிராம மக்களையும் ஆர்டிஓ அனுமதிக்கலாம். அவர்களும் 50 பேர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவர்கள் ஒரே வரிசையாக மட்டும் செல்ல வேண்டும். அரசியல் தலைவர்கள் வரக் கூடாது. பொதுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று தனது உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.