வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் கைது செய்யப்படுவதை தடுக்க முடியாது - ஹைகோர்ட்
வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் கைது செய்யப்படுவதை தடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இருவரும் கைது செய்யப்படுவதை தடை செய்ய முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக இருவர் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. கோட்டை போலீஸ் தொடர்ந்த வழக்கில் குற்றஎண் இல்லாததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன் கைது செய்யப்படுவதை தடை செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். இருவரின் முன் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் வாக்குவாதம்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக ஊழல் புகார்களை கூறியதோடு அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
தங்க தமிழ்செல்வன்
இதையடுத்து அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தினர்.வெற்றிவேலையும் தங்க தமிழ்செல்வனையும் உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர்.
கோட்டை காவல் நிலையம்
இதையடுத்து வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்செல்வன் மீது சட்டசபை வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்தது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெற்றிவேல் தலைமறைவு
வழக்கையடுத்து வெற்றிவேல் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து வெற்றிவேலின் வீடு, அலுவலகங்களில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தங்க தமிழ் செல்வனையும் போலீசார் தேடி வருகின்றனர்.
விசாரணை ஒத்திவைப்பு
இந்த நிலையில் இந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க கோரி வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இருவரையும் கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர், இதனை நிராகரித்த நீதிபதி, முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தார். கோட்டை போலீஸ் தொடர்ந்த வழக்கில் குற்றஎண் இல்லாததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.