நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Recommended Video
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் 26 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள தம்மை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் தமிழக அரசு தரப்பில், நளினிக்கு வெடி மருந்து சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மத்திய அரசுதான் நளினி விடுதலை குறித்து தீர்மானிக்கும் என வாதிடப்பட்டது.
மேலும் நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா? மாநில அரசுக்கு உரியதா? என்பது குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும் தமிழக அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வாதங்களை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என கூறி அவரது மனுவை நிராகரித்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது தமிழக அரசு. அதற்கு அதிகாரம் இருக்கின்ற போது நளினியை விடுதலை செய்வதற்கு மட்டும் மத்திய அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என கூறுவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என்றார்.