18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கே முதலில் விசாரணை - ஹைகோர்ட் முடிவு
நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கை முதலில் விசாரிக்கக் கோரிய ஆளுநர் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கை முதலில் விசாரிக்கக் கோரிய ஆளுநர் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முதலில் விசாரித்து வருகிறது நீதிமன்றம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். தகுதி நீக்கத்தை தடுத்து நிறுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் முறையீட்டனர்.
வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று சபாநாயகர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பழனிசாமி - பன்னீர்செல்வம் இணைந்த தினத்தன்றே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சதித்திட்டம் தீட்டினர். ஆட்சியை கவிழ்ப்பேன் என்று டிடிவி தினகரன், தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் வெளிப்படையாக பேசியதை ஆதாரங்களோடு குறிப்பிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் பதில் மனு தாக்கல் செய்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவர் சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.கஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டு வழக்குகளும் வேறு வேறு என்று கூறிய நீதிபதி ஒன்றாக விசாரிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சபாநாயகர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை விசாரிக்க கோரினார். அதனை ஏற்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். உணவு இடைவேளைக்காக வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார். உணவு இடைவேளைக்குப் பின்னர் இந்த வழக்கு நடைபெற்றது.
தகுதி நீக்க வழக்கை முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி கூறினார். ஸ்டாலின் தாக்கல் செய்த மனு பின்னர் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.