நிலஅபகரிப்பு வழக்கில் பொன்முடியை விடுவித்தது செல்லாது... ஹைகோர்ட் உத்தரவு!
அரசு நிலத்தை அபகரித்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுவித்து சென்னை அமர்வு நீதிமன்றம் அளித்த உத்தரவை ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது.
சென்னை : நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுவித்து சென்னை அமர்வு நீதிமன்றம் அளித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
1998ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த பொன்முடி அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 600 சதுர அடி நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. இந்த நிலத்தை பொன்முடிய தன்னுடைய மாமியார் பெயரில் பதிவு செய்ததையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடியை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கும் நில அபகரிப்பு வழக்கும் ஒன்றல்ல என்று கருத்து கூறியுள்ளனர். மேலும் நில அபகரிப்பு வழக்கில் பொன்முடியை விடுவித்து அளித்த உத்தரவு செல்லாது என்றும் கூறியுள்ளது நீதிமன்றம், இதனால் நில அபகரிப்பு வழக்கை பொன்முடி எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.