மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி நியமனம் செல்லாது- உயர்நீதிமன்றம்
மதுரை: மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி, சந்திரன்பாபு, இஸ்மாயில் ஆகிய இருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர்.
கல்யாணி மதிவாணன், பேராசிரியராக பணியாற்றாமல் இணை பேராசிரியராக மட்டுமே பணிபுரிந்ததால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கல்யாணி மதிவாணன் துணைவேந்தராக நியமிக்கப்பட்டது செல்லாது என நீதிபதிகள் அறிவித்தனர்.
உற்சாகத்தில் போராட்டக்குழு
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன அவர்களுக்கு உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு உற்சாகத்தினை அளித்துள்ளது.
கல்யாணி கலாட்டா
மதுரை காமராசர் பல்கலையில் ஒரு பெண் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதை ஆரம்பத்தில் அனைவரும் வரவேற்றனர். ஆனால் நாளடைவில் கல்யாணியின் நடவடிக்கைகளைக்கண்டு போராட்டங்கள் வெடித்தன.
திரைப்படத்துறை படிப்பு
2012-ம் ஆண்டு ஜூலை மாதம் இவர் திரைப்படத் துறை தொடர்பான சில வகுப்புகளைத் தொடங்குவது என்று அதிரடியாக முடிவெடுத்து பெண்கள் விடுதியைத் தடாலடியாகக் காலி செய்தார். ஆனால் முதல் ஆண்டில் 3 பேரும் 2-ம் ஆண்டில் 10 பேரும் மட்டுமே அந்த வகுப்பில் சேர்ந்துள்ளனர். அதற்கு பல்கலைக் கழக மானியக் குழுவிடம் அனுமதியும் பெறவில்லை
தனியாருக்குத் தாரை வார்ப்பு
அதைத் தொடர்ந்து விடுதிக் கட்டணத்தை தன் இஷ்டம் போல் உயர்த்தினார். உணவு விடுதியை தனியாருக்குத் தாரை வார்த்தார். இதனால் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராடினர். மாவட்ட ஆட்சியர் தலையீட்டின் பேரில் அப்போதைக்குப் பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது.
பொய்யான தகவல்
பல்கலைக்கழக மானியக்குழுவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையும் நிர்ணயித்துள்ள தகுதி கல்யாணி மதிவாணனிடம் இல்லை. பொய்யான தகவல்களைக் கொடுத்து ஏமாற்றி அவர் துணைவேந்தர் பதவிக்கு வந்துள்ளார் என்பது போராட்டக்காரர்களின் முதன்மையான குற்றச்சாட்டு.
துணைவேந்தரின் தகுதி
ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்பதற்கான அடிப்படை தகுதி அவர் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் கல்யாணி மதிவாணன் சென்னை எத்திராஜ் கல்லூரியில் இணைப் பேராசிரியராகத்தான் பணியாற்றியுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி அவர் இணைப் பேராசிரியராகத்தான் பணியாற்றியுள்ளார் என்பதோடு அவருடைய ஊதிய விகிதப்பட்டியலும் பெறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு
அதனடிப்படையில் அவர் மீது மதுரை காமராசர் பல்கலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் கே.வி.ஜெயராஜ் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ரிட் மனு (W.P.11350/2012) தாக்கல் செய்துள்ளார். கல்யாணி மதிவாணன் தனது பதில் மனுவில் அதனை மறுத்து தான் தகுதியின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டு வழக்குகள்
இதுவல்லாமல் அவர் மீது மேலும் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.இஸ்மாயில் மற்றும் சிங்கப்பூரைச் சார்ந்த பேராசிரியர் சந்திரன் பாபு ஆகியோரும் வழக்குத் தொடுத்தனர். இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து கல்யாணியின் பதவியை பறித்துள்ளது.
கொலைமுயற்சி வழக்கு
இதோடு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற சீனிவாசன் என்பவர் கல்யாணி மதிவாணன் மீது அளித்துள்ள புகாரின்பேரின் கொலைமுயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துணை வேந்தர் கல்யாணி மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மருமகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.