சிவகாசி பட்டாசு கடை விபத்தில் 10 பேர் பலி: சிபிஐ விசாரணைக்கு மாற்றலாமா? - நீதிபதிகள் கேள்வி
சிவகாசியில் ஒரே கட்டிடத்தில் பட்டாசுக்கடைக்கும் ஸ்கேன் நிலையத்துக்கும் அனுமதி கொடுத்தது ஏன் என்று அதிகாரிகளிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிள்ளனர்.
மதுரை: சிவகாசி பட்டாசு கடை விபத்தில் 10 பேர் பலியான வழக்கு விசாரணையை ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது என நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் அமர்வு மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த வியாழனன்று மதியம் சிவகாசியில் பட்டாசு ஆலையில் இருந்து 2 வேன்களில் கொண்டு வரப்பட்ட தீப்பெட்டி மத்தாப்பு ரக பட்டாசுகளை கடையில் இறக்கி வைக்கப்பட்டது. அப்போது உராய்வால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. கண்ணி மைக்கும் நேரத்துக்குள் கடைகளில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறத் தொடங்கின. இதில் கடும் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட அருகிலிருந்த ஸ்கேன் சென்டரில் இருந்தவர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆனந்தராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி பட்டாசு விபத்துக்கள் நடக்கின்றன. அம்மாவட்ட அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் டாக்டர், பணியாளர்கள் இல்லை. வசதிகள் செய்யவும் டாக்டர் மற்றும் பணியாளர்களை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரர் வழக்கறிஞர் வியாழக்கிழமையன்று சிவகாசி பட்டாசுக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்குச் சென்றுள்ளனர் என்றார்.
நீதிபதிகள், சம்பவம் பற்றி அறிந்தோம். இதை தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுக்க உள்ளோம் என்றனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் (நீதித்துறை) இளங்கோவன், பட்டாசு விற்பனை மற்றும் வெளியில் கொண்டு செல்வதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. விருதுநகர் டி.ஆர்.ஓ.முத்துக்குமரன் ஆஜரானார்.
விவாதங்களுக்குப் பின்னர் தமிழக உள்துறை முதன்மைச் செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, மாவட்ட தீயணைப்பு அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பவும், அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏசி அறையில் அமர்ந்து கொண்டு அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது கள ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை இணை தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர், சிவகாசி துணை தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர், விருதுநகர் டி.ஆர்.ஓ. அக்டோபர் 25ல் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். தீபாவளியை முன்னிட்டு வெடிபொருள் கட்டுப்பாட்டு சட்டம், விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். விதிமீறல் புகார் வரும்பட்சத்தில், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணை வந்தது, அப்போது நீதிபதிகள், ஒரே கட்டிடத்தில் பட்டாசுக்கடைக்கும் ஸ்கேன் நிலையத்துக்கும் அனுமதி கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பிள்ளனர். பட்டாசு கடைக்கு அனுமதி கொடுத்த வருவாய்த்துறை அதிகாரியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஏன் ஆய்வு மேற்கொள்ளவில்லை என நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு விளக்கம் அளித்த அதிகாரி கரூர், திருச்சியில் பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி கொடுத்ததில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக கூறினார். இதனையடுத்து விதிமீறல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அதிகாரி நீதிபதிகளிடம் தெரிவித்தார். பின்னர் பட்டாசுக் கடை விதிமீறல் தொடர்பாக கரூர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.