மணல் குவாரி தடை... முழுக்க முழுக்க மணல் மாபியாக்களும், அராஜக அரசியல்வாதிகளுமே பொறுப்பு! #sandquarry
Recommended Video
சென்னை: வரலாறு காணாத அளவில் மணல் வளத்தை வண்டை வண்டையாக கொள்ளையடித்துக் கொழுத்த மணல் மாபியாக்களும், அரசியல் குண்டர்களும், இவர்களைக் கட்டுப்படுத்த்த தவறிய அரசுமே மணல் குவாரிகளுக்கான தடைக்கு முழுக்க முழுக்க பொறுப்பாவார்கள்.
வரைமுறையே இல்லாமல் ஆறுகளை சுரண்டி எடுத்து அராஜம் செய்து வந்தனர் இந்த மணல் மாபியாக்கள். அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களின் துணையுடன் இவர்கள் அடித்த கொள்ளைக்கு அளவே இல்லை. திருட்டிலும் கூட வரைமுறை வேண்டாமா.. ஆறுகளையே காணாமல் போகச் செய்யும் வகையில் அராஜகமாக இவர்கள் ஆடிய ஆட்டம்தான் இன்று ஹைகோர்ட்டில் ஆப்படிக்க வைத்துள்ளது.
மணல் கொள்ளையடிக்கத் தடுக்க முயன்று எத்தனை உயிர்கள் பறி போயுள்ளன. லாரி ஏற்றியும், டிராக்டர் ஏற்றியும், உயிரோடு கொளுத்தியும் எத்தனை கொலைகளை இந்த மணல் திருட்டுக் கும்பல் செய்துள்ளது.. அத்தனைக்கும் இன்று ஹைகோர்ட் சரியான சம்மட்டி அடியைக் கொடுத்துள்ளது.
எங்கு பார்த்தாலும் மணல் கொள்ளை
எங்கு பார்த்தாலும் மணல் கொள்ளை, தடுக்க முயன்றால் அடி வெட்டுக் குத்து கொல்லு. ஆட்சியாளர்கள், காவல்துறையினர் என அனைத்துத் தரப்பினரும் இணைந்து இதில் செயல்பட்டு வந்ததால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர். ஆறுகள் அழிந்து வருகின்றன. இதுதொடர்பாக கோர்ட்டுகளில் ஏகப்பட்ட வழக்குகள் இன்று. இவற்றுக்கு விடிவு பிறந்துள்ளது.
கடுமையாக தண்டிக்க வேண்டும்
ஹைகோர்ட்டின் தடை இப்படியே நின்று விடக் கூடாது. இந்தத் தவறுகளில் ஈடுபட்டு வந்த அத்தனை பேரையும் கூண்டோடு பிடித்து சிறையில் தள்ள வேண்டும். மிகக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். ஆறுகளின் வளங்களை காலி செய்தவர்களை ஆயுள் வரை சிறையில் தள்ள வேண்டும்.
தவறிய அரசு.. கொட்டிய ஹைகோர்ட்
தமிழக அரசு செய்திருக்க வேண்டிய நடவடிக்கையைத்தான் உயர்நீதிமன்றம் செய்துள்ளது. எனவே கடுமையான தண்டனை, நேர்மையான விசாரணைக்கும் உயர்நீதிமன்றமே முன்வந்து அதிரடியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மக்களும், சமூக நல ஆர்வலர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
பாதிப்பு வரும்... பரவாயில்லை
நிச்சயம் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் ஸ்தம்பிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஆறுகள் உயிர் பிழைக்கும். அரசு உரிய வழிமுறைகளை வகுத்து அதை கோர்ட் கண்காணித்து ஆறுகளைக் காப்பாற்றவும், மணல் அள்ளுவதை சரி செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையும் ஆகும்.