கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கூடாது: ஹைகோர்ட்
சென்னை: தெருக்கூத்து பாடகர் கோவனை தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டத்தில் கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நவம்பர் 17ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த கோவன், மக்கள் பிரச்னைகளை முன்வைத்து ம.க.இ.க. மேடைகளில் பாடல்களைப் பாடி வருகிறார். டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி இவர் இயற்றி பாடிய ‘மூடு டாஸ்மாக்கை மூடு' பாடல், சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கோவனை கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். கோவன் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தேச துரோக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட கோவனை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தமிழக அரசு கைது செய்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கோவனின் மகன் சாருவாஹன், சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவனின் கைதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அவர், தாக்கல் செய்திருந்த மனுவில், தனது தந்தை கோவன், தேசத்திற்கு எதிராக எதையும் செய்யவில்லை என்றும், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பாடுவது தேச துரோகம் ஆகாது என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், கோவனின் கைது தொடர்பாக நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், கோவன் கைது தொடர்பாக இதுவரை அரசிடமிருந்து தனக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
மனுதாரர் கூறியுள்ளபடி கோவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைதாகியுள்ளாரா என நீதிபதி விசாரித்தார். அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கோவன் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் அரசிடமிருந்து உரிய அறிவுறுத்தல் பெற்று இதற்கு பதிலளிக்க தனக்கு கால அவகாசம் வேண்டும் என்றார்.
வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வரும் நவம்பர் 17ம் தேதி இதுகுறித்து பதிலளிக்கும்படி உத்தரவிட்டார். மேலும், நீதிமன்றம் கொடுத்துள்ள கால அவகாசத்திற்குள் மனுதாரரின் கோரிக்கையின் படி அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் முயற்சிகளில் இறங்கக்கூடாது" என்றும் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.