தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம்: அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி குடும்பத்துக்கு முதல் அடி!
சசிகலா அக்கா மகனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்துள்ளது சென்னை ஹைகோர்ட். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மன்னார்குடி குடும்பத்துக்கு இது முதல் சம்மட்டி அடியாகும்.
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி குடும்பத்துக்கு முதல் அடியாக டிடிவி தினகரனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று தினகரன் மீதான அமலாக்கப் பிரிவு வழக்கு. 1995,1996-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சசிகலா அக்கா மகன் தினகரனின் வங்கி கணக்குகளில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திய போது தம்மை சிங்கப்பூர் குடிமகன் என கூறிக் கொண்டார் தினகரன். ஆனால் இதை அமலாக்கப் பிரிவு நிராகரித்து ரூ28 கோடி அபராதம் விதித்தது.
அப்பீலுக்கு மேல் அப்பீல்
பின்னாளில் தினகரன், லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது இந்த சிங்கப்பூர் குடிமகன் விவகாரம் சர்ச்சையாகவும் வெடித்தது. அமலாக்கப் பிரிவு அபராதம் விதித்ததை எதிர்த்து அப்பீலுக்கு மேல் அப்பீல் போனார் தினகரன்.
காணாமல் போன தினகரன்
2011-ம் ஆண்டு மன்னார்குடி குடும்பத்தை ஓட ஓட ஜெயலலிதா விரட்டியடித்த போது காணாமல் போனவர்களில் தினகரனும் ஒருவர். அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவுடன் கூட்டு சேர்ந்து அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற சதித் திட்டம் தீட்டியவர்களில் தினகரனும் ஒருவர்.
மீண்டும் அதிகார மையமாக...
அதுவும் சசிகலா பொதுச்செயலராக விரும்பாத நிலையில் தம்மை பொதுச்செயலராக்க வேண்டும் என்று தகராறு செய்தவர் தினகரன். தற்போது போயஸ் கார்டனில் தினகரனின் கை தான் ஓங்கியுள்ளது. சசிகலாவை முதல்வராக்குவதில் முனைப்புடன் இருக்கும் தினகரன் அண்ட்கோ அடுத்த அமைச்சரவை பட்டியலையும் தயாரித்து வருவதை நாம் பதிவும் செய்திருந்தோம்.
முதல் சம்மட்டி அடி
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி குடும்பத்தின் ஆட்டங்களுக்கு முதல் சம்மட்டி அடியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் இன்றைய அதிரடி தீர்ப்பு அமைந்திருக்கிறது. தினகரனுக்கு அமலாக்கப் பிரிவு 20 ஆண்டுகளுக்கு முன் விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது. கட்சியும் ஆட்சியும் தங்களது வசமே என கற்பனைவானில் ரெக்கை கட்டி பறக்கும் மன்னார்குடி கோஷ்டிக்கு விழப்போகிற மரண அடிகளுக்கு முதல் அடியாகவே இதை பார்க்கிறோம் என்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.