வேறு மாநில எஸ்சி, எஸ்டி சாதிச் சான்றிதழை தமிழகத்தில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு பயன்படுத்த முடியாது
வேறு மாநில எஸ்சி எஸ்டி சாதிச் சான்றிதழ் தமிழ்நாட்டில் பயன்படுத்த முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: வேறு மாநிலத்தில் சாதிச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் அதை தமிழ்நாடு இட ஒதுக்கீட்டின்படி எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி எஸ்.கீதா ஆந்திராவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர். இவர் ஆந்திர அரசால் வழங்கப்பட்ட எஸ்டி சாதி சான்றிதழ் பெற்ற கீதா தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் சேர்க்கை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவில், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்க தேர்வுக் குழு தனக்கு எஸ்டி பிரிவு இடஒதுக்கீட்டில் சேர்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில், வேறு மாநிலத்தில் சாதிச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் அதை தமிழ்நாடு இட ஒதுக்கீட்டுப் பிரிவின்படி எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஒரு ஆங்கில நாளிதழ் நீதிபதி வைத்தியநாதன் கூறியதைக் குறிப்பிடுகையில், என்னுடைய பார்வையில் இந்த மனுதாரர் ஆந்திர அரசால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழை சமர்ப்பித்துள்ளார். இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தன்னுடைய விண்ணப்பத்தை மருத்துவக் கவுசிலில் பரிசீலிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இவர் இந்த மனுவின் மூலம் எந்த நிவாரணமும் பெற இயலாது." என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில், குடிபெயர்வு பற்றிய கேள்வியை மதிக்க வேண்டும். மனுதாரர் ஆந்திரப் பிரதேச அரசிடமிருந்து சாதிச் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. சட்டப்படி இவர் எந்த பலனும் பெற இயலாது. அதனால், இந்த விண்ணப்பதாரர் பொதுப்பிரிவின் கீழ்தான் பரிசீலிக்கப்படுவார் என்று நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
ஆனால், உச்ச நீதிமன்றம் மாரி சந்திரா வழக்கில் அளித்த தீர்ப்பில், ஒரு நபர் எஸ்சி, எஸ்டி சாதியைச் சேர்ந்தவராக இருந்து அவர் பணி நிமித்தமாகவோ அல்லது கல்விக்காகவோ வேறு மாநிலத்துக்கு குடி பெயர்ந்திருந்தால் அவர் சொந்த மாநிலத்திலிருந்துதான் சலுகைகளைப் பெற முடியும் குடிபெயர்ந்த மாநிலத்தில் சலுகைகளைப் பெற முடியாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றொரு வழக்கில் அளித்த தீர்ப்பில், ஒரு நபர், இட ஒதுக்கீடு பிரிவில் விண்ணப்பித்திருப்பாராயின் அவர் சாதிச்சான்றிதழை குறிப்பிட்ட நேரத்துக்குள் சமர்ப்பிக்காவிட்டால் அவருடைய சேர்க்கை செல்லாது என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.