தென் தமிழகத்தில் ஹெச்.சி.எல் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ6,500 கோடி முதலீடு செய்ய திட்டம்: ஷிவ் நாடார்
சென்னை: தென் தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ6,500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹெச்.சி.எல். மென்பொருள் நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று தொடங்கிய சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் ஷிவ் நாடார் பேசியதாவது:
இந்தியாவின் அறிவுசார் மையமாக தமிழகம் திகழ்கிறது. பணித்திறனின் தலைமையிடமாக சென்னை இருந்து வருகிறது.
இந்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு என்னை அழைத்ததை மிகப் பெரும் கவுரமாக கருதுகிறேன். நான் படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.
எங்களது ஹெச்.சி.எல். நிறுவனம் ஆண்டுக்கு ரூ45 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுகிறது. மொத்தம் 1 லட்சம் பேர் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 35 ஆயிரம் பேர்.
எங்கள் நிறுவனங்கள் தற்போது சென்னை, கோவையில் இருக்கிறது. விரைவில் மதுரை,நெல்லையிலும் எங்களது நிறுவனங்களை அமைக்க உள்ளோம்.
தமிழகத்தில் ஏற்கெனவே ரூ.6,000 கோடி அளவில் ஹெச்.சி.எல். நிறுவனம் முதலீடு செய்துள்ளது. தென் தமிழகத்தில் நாங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ6,500 கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் 20,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு ஏதுவாக பயிற்சியளிப்போம்
இவ்வாறு ஷிவ் நாடார் பேசினார்