அண்டா குண்டாவுடன் பிரியாணி சாப்பிடும் கைதிகள்.. அதிரடிக்கு மாறப் போகும் புழல்
புழல் சிறையில் மாற்றங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை: புழல் சிறை இனி மாற்றத்தை காண போகிறதா?
பிரியாணி அரிசியை தன் வாழ்நாளில் பார்க்காத ஏழைகள் இன்றும் உண்டு. ஆனால் மாபாதக செயலை செய்யும் பயங்கரவாதிகளுக்கு சிறையில் பிரியாணி போடப்படும் அதிசயமும், அதிர்ச்சியும் நம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
நம் நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட எண்ணற்ற தியாகிகளுக்கு சிறையில் அழுகலும், புழுக்களும், நாறிப்போன சாப்பாட்டையும் கொடுத்து சித்ரவதை செய்தது அன்றைய பிரிட்டிஷ் அரசு. இப்படி எல்லாம் அரைவயிற்று கஞ்சியாகவும், பட்டினி, பசி, தீர்க்க முடியாத நோய்களில் அவதிப்பட்டு தங்கள் உயிரையும் மாய்த்து அதில் பெற்று தந்த தலைவர்களின் சுதந்திரம் இது.
குற்றங்கள் குறைவு
சிறைவாசம் என்றாலே அலறி துடித்த காலம் உண்டு. அஞ்சி நடுங்கிய மனிதர்கள் உண்டு. அவமானத்தால் கூனிகுறுகி தற்கொலை செய்து கொண்ட நிலை இருந்தது. அதனாலேயே குற்றங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்தது. அப்படி ஒரு குற்றம் நடந்துவிட்டால் மக்கள் அந்த செய்தியை வாங்கி படிக்க ஆர்வம் காட்டுவார்கள். படித்தவர்கள் படிக்காதவர்களுக்கு கூட அந்த செய்தியை ஒருவித பய உணர்வுடனே படித்து காட்டுவார்கள்.
[வடிவேலுவை போல் வேறு பேருந்தில் ஏறி சென்ற நடத்துநரால் எழுந்தது சிரிப்பலை! ]
சிறை சொகுசு வாசம்
ஆனால் இன்றைய சிறை வாசம் இப்படியா இருக்கிறது. சிறை சொகுசு வாசம் என்ற பெயர் தற்போது எழுந்துள்ள நிலைக்கு யார் யாரணம்? என்ன காரணம்? சிறைவாசத்தில் குற்றவாளிகளை அடைக்க இடமே இல்லாத நிலை உருவாகிவிட்டது. இல்லையென்றால் அவர்களை விடுவிக்கும் நிலைக்கு ஆளாகிவிட நேர்கிறது. புழல் கடந்த சில காலமாகவே சிக்கலில் சிக்கி வருகிறது.
வறுத்தெடுத்த மக்கள்
போதை, கடத்தல் பேர்வழிகளுக்கு சொகுசு என்ற வார்த்தையின் அர்த்தத்தை நிமிடந்தோறும் கண்முன்னே காட்டி சிலாகித்து வருகிறது. பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது, சிறைக்குள் இருப்பவர்களுக்கே பொருந்தி போயிற்று. வெட்ட வெளிச்சமானது சொகுசு வசதிகள்.. வைரலானது படோடப வாழ்க்கை.. அரசையும், சிறைத்துறை மாறி மாறி மக்கள் வறுத்தெடுக்க தொடங்கினார்கள். ஆசியாவிலேயே பெரிய சிறை என பெயர் பெற்ற சிறையிலேயே இவ்வளவு அட்டூழியமும் நடந்துள்ளது.
அண்டா, குண்டா
இந்த சோதனையின் போது புழல் சிறையில் இருந்து 29 டி.வி.க்கள், 18 கட்டில்கள், 27 எப்.எம். ரேடியோக்கள், 4 குக்கர்கள், பிரியாணி செய்யும் பெரிய பெரிய அண்டா, 200 கிலோ பாசுமதி அரிசி, 100 கிலோ பொன்னி அரிசி, நூடுல்ஸ் பறிமுதல் செய்தார்கள். அதுவும் அந்த அண்டா இருக்கிறதே.. அதை கொண்டுபோய் சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் மறைத்து வைத்திருந்து இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட குற்றவாளியே அண்டா குண்டா அரிசி பருப்புடன் சிறைக்குள் நுழைய வாய்ப்பே இல்லை.
தீவிர ஆலோசனை
இன்றைய இளம்குற்றவாளிகளுக்கு சிறை என்றாலே நடுக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு சிறை நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது. சிறைவாசிகளிடம் கூட்டணி வைத்து உறவுக்கு பாலம் அமைத்தால் நிலைமை இப்படித்தான் ஆகும். ஒரு கட்டத்தில் சிறைவாசிகள் அதிகாரிகளையும் மிரட்டும் நிலைதான் ஏற்படும். புழலின் யோக்கியதை தெரிந்துவிட்டது என்பதாலோ அல்லது நேர்மையான அதிகாரிகளின் பார்வையில் இந்த விவகாரம் விழுந்ததாலோ தெரியவில்லை... விளைவு... தீவிர ஆலோசனையில் கொண்டுபோய் கொண்டிருக்கிறது.
கண்காணிப்பு காமிராக்கள்
அதன்படி பல்வேறு மாறுதல்களும், அதிரடிகளும் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது சிறையில் உள்ள சாதாரண பூட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் லாக் முறையிலான பூட்டு போடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன், பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களை சிறைத்துறையின் தலைமை இடத்திலிருந்தே பார்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
சிறைச்சாலை - அறச்சாலை
இதற்காக அரசிடம் அனுமதியும் சிறைத்துறை சார்பாக கேட்கப்பட்டுள்ளதாம். அப்படி அனுமதி வழங்கப்பட்டு விட்டால், அதற்கான நிதியையும் அரசு நிச்சயம் ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கலாம். சிறைச்சாலை என்பது ஒரு அறச்சாலை என்பதை இனியாவது சில அதிகாரிகளும் குற்றவாளிகளும் உணர வேண்டும். இதனை அரசுதான் தயவுகூர்ந்து செய்ய வேண்டும்.