நாய் வண்டியில் ஊர்வலம் வந்த மணமகள்... தர்மபுரி அருகே வித்தியாசமான பெண் அழைப்பு!
தர்மபுரி: தர்மபுரி அருகே திருமணத்திற்காக மணமகள் நாய் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதனை ஊர்மக்கள் கூடிநின்று ரசித்தனர்.
தர்மபுரி அருகே பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி தங்கவேல்(50). இவருக்கு இலக்கியா, குறளரசி என்ற மகள்கள் உள்ளனர். முதல் பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. இவரது 2வது மகளான குறளரசிக்கும், முத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த சக்திவேலுக்கும் தர்மபுரி கோட்டை கோயிலில் இன்று காலை 9மணிக்கு திருமணம் நடைபெற்றது.
தங்கவேல் தனது வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். தனது வீட்டில் ஒருவராகவே அந்த நாயை பாவித்து வரும் தங்கவேல், அதற்கென தனி வண்டி ஒன்றையும் உருவாக்கியுள்ளார். தினமும் அந்த வண்டியில் பால் கேன்களை வைத்து இழுத்துச் சென்று பால் சொசைட்டியில் சேர்ப்பது அந்த நாயின் வேலையாம்.
இந்நிலையில் தனது மகள் குறளரசியின் திருமண ஊர்வலத்தை வித்தியாசமாக நடத்த திட்டமிட்டார் தங்கவேல். அதன்படி, மேள தாளம் முழங்க மணப்பெண்ணை நாய் பூட்டிய வண்டியில் வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தார்.
இதற்கென நாயை குளிப்பாட்டி அதற்கும் மேலாடை, கழுத்தில் மாலை அணிவித்து ஊர்வலத்தில் ஈடுபடுத்தியது பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியது. 100 அடி தூரத்திற்கு மணப்பெண்ணை உட்கார வைத்து நாய் உற்சாகமாக இழுத்து வந்தது.
கோயிலுக்கு அருகில் வந்ததும், வண்டியில் இருந்து இறங்கிய மணப்பெண், நாய்க்கு முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் திருமணம் இனிதே நடந்தது.
இந்த நாய் வண்டி ஊர்வலம் குறித்து தங்கவேல் கூறுகையில், "நான் கடந்த 5 ஆண்டுகளாக நாயை வளர்த்து வருகிறேன். அந்த நாய்க்கு மணி என பெயரிட்டு, அதற்குக்கென தனியாக சின்னதாக வண்டியை செய்துள்ளளேன். அந்த வண்டியில் பால் கேன்களை வைத்து விட்டால் போதும், மணி தினமும் பால் சொசைட்டிக்கு சென்று பாலை கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து விடும். முன்பு திருமண நிகழ்ச்சிகளில் குதிரை பூட்டிய சாரட்டு வண்டிகளில் பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு நடத்தப்படும். நான் எனது நாய்க்கு பெருமை சேர்க்க என் மகளை நாய் சாரட்டு வண்டியில் வைத்து ஊர்வலம் நடத்தினேன்'' என்றார்.