விழுப்புரத்தில் விஷ ஊசி போட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை
விழுப்புரம்: விழுப்புரத்தில் விஷ ஊசி போட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் வி.மருதூர் தர்மராஜா தெருவை சேர்ந்தவர் நாகராஜன், 42. இவர் கடந்த ஆண்டு விழுப்புரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஏட்டாக பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
லஞ்ச ஒழிப்பு போலீசில் பணியாற்றியபோது ஜனார்த்தனன் என்ற பெயரில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே கருணாநிதி நகரில் உள்ள ஜாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். பணி மாற்றத்துக்குப்பின்னரும் அதே அறையில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அறைக்கு திரும்பிய அவர் டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு தூங்கினார். இன்று காலை வெகுநேரமாகியும் நாகராஜன் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கப்படவில்லை.
சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நாகராஜன் விஷஊசி போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து விடுதியின் மேலாளர் விழுப்புரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் நாகராஜின் உடலை பிரேதபரிசோதனைக்காக முண்டியபக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த நாகராஜ் கடந்த 28ம் தேதி அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு கடந்த 4ம் தேதி காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு பணியில் சேர்ந்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து அவர் என் விடுவிக்கப்பட்டார் என காரணம் தெரியவில்லை. நாகராஜ் தற்கொலைக்கு மேல் அதிகாரிகளின் தொல்லை காரணமா இல்லை வேறு காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் துணை காவல் ஆணையராக இருந்த கர்நாடகாவை சேர்ந்த இளம் ஐ.பி.எஸ் . அதிகாரி என்.ஹரிஷ் சில மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல் டி.எஸ்.பி. விஷ்னுபிரியா தூக்குப் போட்ட நிலையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.
தாராபுரத்தில் பெண் காவலர் உள்ளிட்டோர் வரிசையில் தற்போது தலைமை காவலர் நாகராஜ் தற்கொலை செய்துகொண்டிருப்பது தமிழக காவல் துறையில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.