மாணவிகளிடம் சில்மிஷம்... கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட தலைமையாசிரியர்
வேலூர்: வேலூர் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய தலைமை ஆசிரியருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொட்டார மடுகு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
வேலூர் பலவன்சாத்து குப்பம் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். இவர் 5 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்துகிறார்.
மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியர் அருணாசலம் ஆபாசமாக பேசி, அநாகரீகமாக நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் முறையிட்டனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் 2 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவகாரத்தை கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் கமலக்கண்ணன், உதவி தொடக்க கல்வி அலுவலர் மைகேல்தாஸ் மற்றும் குடியாத்தம் போலீஸ் டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதை ஏற்ற அவர்கள் கலைந்து சென்றனர். பள்ளி தலைமையாசிரியர் அருணாசலம் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று மாதம் மருத்துவ விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
அடுத்த கல்வி ஆண்டு முதல் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்படுவார். அந்த பள்ளி தலைமையாசிரியர் பொறுப்பை அங்கு பணியாற்றும் சீனியர் ஆசிரியர் ஒருவர் கவனித்துக் கொள்வார் என்று தெரிவித்துள்ளனர் மாவட்ட கல்வித்துறையினர்.