மதுரை பேராசிரியர் ஜெனிபாவை கத்தியால் குத்தியதற்கு காரணம் இதுதானாம்- இளைஞர் பரபர வாக்குமூலம்!
மதுரை காமராசர் பல்கலை. மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறைத்தலைவர் ஜெனிபா தனக்கு நிறைய வகுப்பு நேரங்களை ஒதுக்காததே காரணம் என அவரை கத்தியால் குத்தி சிக்கிய இளைஞர் ஜோதி முருகன் வாக்குமூலம் அளித்த
மதுரை: மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளரான தமக்கு நிறைய வகுப்புகளையும் நேரத்தையும் ஒதுக்குங்கள் என கேட்க, துறைத் தலைவர் ஜெனிபா மறுக்கவே தாம் ஆத்திரமடைந்து அவரை குத்தினேன் என சிக்கிய இளைஞர் ஜோதி முருகன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையின் தலைவராக பணியாற்றி வருபவர் ஜெனிபா. அவரின் கீழ் பகுதி நேர விரிவுரையாளாராகப் பணியாற்றியவர் ஜோதி முருகன்.
இன்று ஜோதி முருகன் தன் துறைத் தலைவர் ஜெனிபா அறைக்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென ஜெனிபாவை கத்தியால் குத்தியுள்ளார்.
அப்போது ஜெனிபா அலறித் துடிக்கவே அங்கு மாணவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு, ஜோதிமுருகனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தற்போது ஜெனிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொலை செய்ய முயற்சித்த ஜோதிமுருகன், 'துறைத் தலைவர் ஜெனிபாவிடம் எனக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. பெண் வீட்டாரிடம் நான் பல்கலைக் கழகத்தில் நிரந்தர பணியில் உள்ளேன் எனக் கூறியுள்ளேன்.
அதனால், எனக்கு வகுப்பெடுக்க நிறைய நேரம் ஒதுக்குங்கள் என கூறினேன். ஆனால், நான் இதுகுறித்து பலமுறை கூறியும் ஜெனிபா கண்டுகொள்ளவே இல்லை. இன்றும் மீண்டும் அதே கோரிக்கையுடன் அவரை சந்தித்தேன். ஆனால் அவர் எனக்கு நிறைய நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார். அதனால் எழுந்த ஆத்திரத்தில் அவரைத் தாக்கினேன்' என கூறியுள்ளார்.