கோவில்பட்டி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியர் மீது வழக்கு
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழத்தோட்ட நகரை சேர்ந்தவர் ராணி. இவர் இலுப்பையூரணியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்ல மறுத்து வீட்டிலேயே இருந்து வந்தார்.
இதையடுத்து பள்ளிக்கு செல்லுமாறு ராணியை அவரது தாயார் வற்புறுத்தியுள்ளார். அப்போது பள்ளிக்கு செல்ல முடியாது என்று கூறிய ராணி, தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் பள்ளியில் தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், இதற்கு பயந்தே பள்ளிக்கு செல்லவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இந்திய ஜனநாயக மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணனிடம் கூறினார். அவரது தலைமையில் திரண்ட கட்சியினர் மற்றம் பொதுமக்கள் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம் சென்ரறு மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட டிஎஸ்பி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் இது தொடர்பான விசாரணை மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியர் கிருஷ்ணனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.