எண்ணூர் கடலில் எண்ணெய் அகற்றியவர்களுக்கு உடல்நலம் கடும் பாதிப்பு- திடுக் தகவல்கள்
எண்ணூர் கடலில் கொட்டிய எண்ணெய்யை அகற்ற உதவிய மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதாக உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
சென்னை : எண்ணூரில் கடலில் கொட்டிய எண்ணெய்யை அகற்ற உதவிய தன்னார்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், முதற்கட்டமாக கண் எரிச்சல், சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருவதாக உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டன. இதில் கப்பலில் இருந்த பல்லாயிரம் லிட்டர் எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. இதனைத்தொடர்ந்து கடல்வாழ் உயிரினங்கள் செத்துபோகும் அபாயம் ஏற்பட்டது. கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்களும் அச்சமடைந்தனர்.
கடலில் கொட்டிய எண்ணெய்யை துறைமுக நிர்வாகமும், கடலோரக் காவல்படையும் இணைந்து அகற்றினர். மேலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் ஈடுபட்டனர்
கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக 1000க்கும் மேற்பட்டோர் எண்ணெய்யை அகற்றினார். இதையடுத்து எண்ணூர் பகுதியில் இருந்து முற்றிலுமாக எண்ணெய் அகற்றப்பட்டது என்று அரசு அறிவித்தது.
இந்திலையில் எண்ணெய்யை அகற்ற உதவிய தன்னார்வலர்கள், நோய் வாய்பட்டுள்ளதாக உண்மை கண்டறியும் குழு ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உண்மை கண்டறியும் குழுவுடன் 3 மருத்துவர்கள், 50க்கும் மேற்பட்டோரை சந்தித்து ஆய்வு மேற்கொண்டது.
அதில் போதிய பாதுகாப்பு உபகாரணங்கள் இல்லாமல் எண்ணெய்யை அகற்றியதால் பல தன்னார்வலர்களுக்கு முதற்கட்டமாக கண் எரிச்சல் , இருமல், தொண்டை எரிச்சல், மார்பு இறுக்கம் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது.
குறிப்பாக எண்ணெய்யில், பென்சீன் உள்ளிட்ட வேதி பொருட்களினால் புற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. மேலும் எண்ணெய்யால் ஏற்படும் நோய்கள் குறித்து போதிய விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களை அடுத்த ஒரு ஆண்டு முழுவதும் முறையான மருத்துவ பரிசோதனையை அரசு மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே கடலில் கசிந்த எண்ணெய்யால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான பாடத்தை சேர்க்கவேண்டும் என்று கடலோரக் காவல்படை ஐஐடி மேட்ராஸ்ஸிடம் வலியுறுத்தியுள்ளது.