தமிழத்தில் படிப்படியாக டெங்கு குறைந்துவருகிறது- அமைச்சர் விஜய பாஸ்கர்
டெங்கு சிகிச்சை குறித்து எழும்பூர் மருத்துவமனையில் சுகாதரத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
சென்னை : தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்திருப்பதாக அரசு மருத்துவமனைகளில் இன்று ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வந்தது. இதனால் இரு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து மாநில அரசு டெங்குவைக் கட்டுப்படுத்த உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் டெங்குவிற்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் சிகிச்சை நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'டெங்கு பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் 40 ஆக இருந்த எண்ணிக்கை இப்போது 100க்கு 20 என்கிற அளவில் குறைந்துள்ளது. தேவையான சிகிச்சைகள் சரியான முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.
டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் காய்ச்சல் வந்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தன்னிச்சையாக மருந்துகள் எடுப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.
மாவட்ட ஆட்சியர்கள் டெங்கு ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த வாரத்தில் டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்படும். மத்திய அரசிடம் டெங்குவிற்கு நிவாரண உதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.