மெக்கானிக்கும்... டாக்டரும்...! சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன குட்டிக்கதை
சென்னை: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கையின்போது மருத்துவத்தின் மகத்துவத்தை விளக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குட்டிக்கதை ஒன்றினை சுவாரஸ்யமாகக் கூறினார்.
ஒரு இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் தனது காரை எடுத்து கொண்டு எப்போதும் செல்லக்கூடிய அவருடைய மெக்கானிக் நண்பரிடம் சர்வீஸ் செய்ய போனார்.
சர்வீஸ் முடிந்த பின்னர் அந்த மெக்கானிக் நண்பர் கொஞ்சம் தயங்கிய படியே மருத்துவரிடம் ஏதோ பேச முற்பட்டார். அதை கவனித்த மருத்துவர் அந்த நண்பரிடம் ஏன் தயங்குகிறீர்கள் கேட்டார்.
அதற்கு மெக்கானிக் நண்பர் சொன்னாரு, "நான் ஒன்னு கேட்பேன் டாக்டர் எதுவும் தப்பா எடுத்தக்க கூடாது" என்றார். "நான் தப்பா எடுத்துக்க மாட்டேன், கேளுங்க" என்று டாக்டர் சொன்னார்.
அதற்கு மெக்கானிக் நண்பரோ, "டாக்டர் காரோட இதயம் போன்றது என்ஜின். இந்த என்ஜினை நான் சர்வீஸ் பண்றேன். மனிதோட என்ஜின் போன்றது இதயம். இந்த இதயத்தை நீங்க சர்வீஸ் பண்றீங்க.
நான் கார் மெக்கானிக்! நீங்க ஹார்ட் மெக்கானிக்! நம்ப ரெண்டு பேரும் ஒரே வேலைய தான் செய்யறோம். ஆனா உங்களை மட்டும் டாக்டருனு பெருமையா சொல்லாறங்களே! ஏன் டாக்டர்?" என்று கேட்டார். அதற்கு டாக்டர், லேசாக சிரித்த டாக்டர், கார்கிட்ட போயி கார ஸ்டார்ட் பண்ணிட்டு காருக்கு முன்னாடி போயி பேனட்டை திறந்தார்.
"காருக்கு இதயம் போன்றது என்ஜின், ஓடிக்கொண்டிருக்கும் என்ஜினில் நீங்க ரிப்பேர், சர்வீஸ் செய்யுங்கன்னு"நண்பரிடம் சொன்னார் டாக்டர்.
உடனே மெக்கானிக் நண்பர் ஓடிக்கொண்டிருக்கும் என்ஜின்ல எப்படிங்க சர்வீஸ் பண்றது? என்று சீரியஸாக் கேட்டார்! என்ஜினை ஆப் பண்ணுங்க சர்வீஸ் பண்றேன்னு சொன்னாரு! உடனே டாக்டர் சொன்னாரு " நீங்க வேணும்னா என்ஜினை ஆப் பண்ணிட்டு வேலை பார்க்கலாம்! நான் என்ஜினை ஆப் பண்ணிட்டா.. எனக்கு வேலையே இருக்காது! என்று கூறினார்.
இந்த கருத்தை அவையிலே சொல்வதற்கு காரணம் அத்தகைய மகத்துவதான சேவை துறை தான் மக்கள் நல்வாழ்வுத்துறை என்று கூறினார்.