11 மணி நேரம் டிஜிபி ராஜேந்திரன் வீட்டை தோண்டித் துருவிய சிபிஐ.. விஜயபாஸ்கர் வீட்டிலும் தீவிர ரெய்டு!
Recommended Video
சென்னை: குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி அதிர வைத்தனர். டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் 11 மணி நேரம் ரெய்டு நடைபெற்றது.
டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் காலை 6.30 மணி முதல் ரெய்டு நடந்தது. அவரை வீட்டுக்குள் முடக்கி வைத்து விட்டு அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட பலரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தியுள்ளது சிபிஐ.
முன்னாள் காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ் வீட்டிலும் சிபிஐ ரெய்டு நடத்தினர். அவரது வீடு முகப்பேர் அடுத்த நொளம்பூர் பகுதியில் உள்ளது. இவரது வீட்டில் 9 மணி நேரத்திற்கும் மேலாக ரெய்டு நடைபெற்றது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்று இரவு 7 மணியளவில் நிறைவுற்றது. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் ரெய்டு நடக்கிறது.
குட்கா அதிபர் மாதவராவிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்ற பெயர்கள் அடிப்படையிலும், அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி ஆர் கே நகர் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் அதே ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது விஜயபாஸ்கரின் வீட்டிலிருந்து ஆர் கே இடைத்தேர்தலுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா பணம், அதை எந்தெந்த அமைச்சர்களுக்கு பிரித்து வழங்குவது உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களில் 35 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர்கள் பாண்டியன், சேஷாத்ரி வீடுகளும் ரெய்டுக்குள்ளாகின. விற்பனை வரித்துறை அதிகாரி கணேசன் வீடும் ரெய்டிலிருந்து தப்பவில்லை.
குட்கா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை என்பவரின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
ரெய்டுக்குள்ளான பிறர்:
காவல்துறை துணை ஆணையர் மன்னர் மன்னன், குட்கா உற்பத்தியாளர்கள் மாதவராவ், சீனிவாச ராவ், உமா சங்கர், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், லட்சுமிநாராயணன், மத்திய வரித்துறை அதிகாரி குல்சார் பேகம், விற்பனை வரித்துறை அதிகாரி பன்னீர் செல்வம்.