அன்று சசிகலா... இன்று விஜயபாஸ்கர்... மோடி டிசைன் அப்படி
சென்னை: சசிகலாவின் தலையில் மோடி கை வைத்த நேரம் அவர் சிறைக்கு போனார். அதேபோல விஜயபாஸ்கர் தோளில் மோடி தட்டிக்கொடுத்த நேரம் அவர் வருமான வரித்துறையினரின் பிடியில் சிக்கியுள்ளார் என்று பேசிக்கொள்கின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தோளில் கை வைத்து எந்த நேரத்தில் பிரதமர் மோடி பாராட்டினாரோ அப்போதே அவருக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்று நமட்டு சிரிப்பு சிரிக்கின்றனர் அதிமுகவினர்.
சசிகலா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அம்பலமானதால் ஏப்ரல் மாதம், விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையின் போது ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் சிக்கின. இதனைத் தொடர்ந்து விஜயபாஸ்கர், அவரது மனைவி, மற்றும் தந்தை ஆகியோரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர்.
சிக்கிய விஜயபாஸ்கர்
அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஏற்கனவே ரெய்டுக்கு ஆளானவர்தான் என்றாலும் சற்றே ஆறியிருந்த அந்த சம்பவம் இப்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வருமான வரித்துறையின் கிடுக்கிப் பிடியில் வசமாக சிக்கியுள்ளார் விஜயபாஸ்கர்.
சொத்துக்கள் முடக்கம்
புதுக்கோட்டை மாவட்ட பதிவாளருக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், திருவேங்கைவாசல் குவாரி உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஜயபாஸ்கர் சொத்துகளை முடக்கி புதுக்கோட்டை நில ஆய்வாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தட்டிகொடுத்த மோடி
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்தித்து 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி வேண்டுகோள் விடுத்தனர். தமிழக அமைச்சர்கள் மோடியைச் சந்தித்துவிட்டு கிளம்பிய போது, பிரதமர் மோடி அமைச்சர் விஜயபாஸ்கர் முதுகில் தட்டிக் கொடுத்தபடி, 'வெரி யங் மினிஸ்டர்' என, சிரித்தபடி கூறினாராம்.
மகிழ்ச்சியில் விஜயபாஸ்கர்
இதை கேட்டு, விஜயபாஸ்கர் புல்லரித்து போனாராம். அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் தெரிந்ததாம்.
பிரதமரே நம்மை பாராட்டி விட்டாரே என்ற சந்தோஷத்தில் மிதந்தபடியே அறையிலிருந்து வெளியே வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வருமான வரித்துறை சம்மன்
செல்போனில் அழைத்த அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர், வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து உங்களுக்கு, சம்மன் வந்துள்ளது. உங்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர். உடனடியாக, சென்னை வந்துவிடுங்கள்' என்றாராம். இதைக் கேட்டதும் மகிழ்ச்சி அத்தனையும் வடிந்து விட்டதாம்.
மோடி டிசைன் அப்படி
ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது, சசிகலாவின் தலையில் கை வைத்து, ஆறுதல் கூறினார், மோடி. அதன்பின் சசிகலா பெங்களூரு சிறைக்குப் போனார். இப்போது, விஜயபாஸ்கர் முதுகில் தட்டிக் கொடுத்ததும், அவருக்கு, வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. எல்லாம் மோடியின் டிசைன் என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.