கோவை, சேலம் மக்களே உஷார்... டெங்கு பாதிப்பு அதிகம் - அமைச்சரே ஒப்புதல்!
கோவை, சேலம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிக அளவில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை : அண்டை மாநிலமான கேரளாவில் டெங்கு பாதிப்பு அதிக அளவில் இருப்பதால் கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பரவி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து விசாரித்தார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் டெங்கு நோயால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு எடுத்து வரும் தொடர் கண்காணிப்புகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 416 நடமாடும் மருத்துவமனைகள், 780 மருத்துவக் குழுக்களும் காய்ச்சல் கண்காணிப்புப் பணிகள், ஆயிரக்கணக்கானோர் டெங்கு விழிப்புணர்வும் நடத்தி வருகின்றனர்.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூச்சியியல் வல்லுநர்களைக் கொண்டு டெங்கு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் உள்ளது. என்றாலும் எல்லையோர மாவட்டமான கன்னியாகுமரியில் 100 சதவீதம் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை, சேலம் மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. விரைவில் அங்கும் 100 சதவீதம் அங்கு டெங்கு கட்டுப்படுத்தப்படும். மற்ற மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு இல்லை.
காய்ச்சல் இருந்தால் மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும், தானாக மருந்து எடுத்துக்கொள்வது அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதன் மூலம் நோய் பரவல் அதிகமாகிவிடும்.
அரசு மருத்துவமனையில் உள்நோயாளியான சேரும் பட்சத்தில் காய்ச்சல் முறையாக கண்காணிப்பட்டு உடினடியாக அனைத்து பரிசோதனைகளும் செய்து காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும்.
டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு சுத்தமான நீரின் மூலமே பரவுகிறது. சாலைகளில் நீரை தேங்கவிடும் கட்டிட உரிமையாளருக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை உள்ளாட்சித் துறையும் மேற்கொண்டு வருகிறது, என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.