மருத்துவ படிப்பில் 85% உள்ஒதுக்கீடு தடைக்கு எதிராக மேல்முறையீடு: அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவப் படிப்புகளில் மாநிலப் பாடப்பிரிவில் படித்தவர்களுக்கு 85% இடஒதுக்கீட்டுக்கான அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை : மருத்துவப் படிப்புகளில் மாநிலப் பாடப்பிரிவின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு 85 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.
மருத்துப் படிப்புக்கான இடஒதுக்கீட்டில் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்த தயாராக இருந்தது. அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை 17ம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், இந்த வாதம் உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதனை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்ட நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு நடந்த விசாரணையில் இடஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 15 சதவீதம் மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டள்ளதை எதிர்த்து அந்த மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அரசின் ஆணையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால் திட்டமிட்டபடி மருத்துவ கலந்தாய்வு நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த உத்தரவு நகல் கிடைத்தவுடன், ஹைகோர்ட்டின் இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யப்படும். நீட் தேர்வை ஏற்று வழக்கு தொடர்ந்த சில மாநிலங்கள் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டு நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளன.
ஆனால் இன்றளவும் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவில் உறுதியாக உள்ளது. மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசும் முழு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.