அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தையிடம் 6 மணி நேரம் விசாரணை...குவாரி முறைகேடு குறித்து துருவிய அதிகாரிகள்!
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பியிடம் அதிகாரிகள் 6 மணி நேரம் தோண்டித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் புதுக்கோட்டை, இளூப்பூரில் உள்ள குவாரிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் அமைச்சரின் மனைவி ரம்யாவிடம் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சின்னதம்பி இன்று காலை 11 மணியளவில் நுங்கம்பாக்கம் வருமான வரி புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் சொத்துக்குவிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல், அவரது குடும்பத்திற்கு சொந்தமான கல் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும், வருமானத்திற்கு அதிகமான சேர்க்கப்பட்ட வருவாய்க்கான மூலதனம் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் துருவித் துருவி கேள்வி எழுப்பியுள்ளனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணை மாலை 4 மணியளவில் முடிந்தது.