சுகாதாரத்துறை அமைச்சரும் விசாரிக்கப்படுவார்... அவரும் கூட்டுக்குற்றவாளிதான் - கே.பி முனுசாமி
ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடைபெற்றார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் விசாரிக்கப்படுவார் என்று ஓபிஎஸ் அணியினர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
சென்னை : ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும் என்பதே நோக்கம் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். நீதி விசாரணை நடத்தப்பட்டால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் ஓபிஎஸ் அணியினர் கூறியுள்ளனர்.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் தலைமையில் நாளை உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுவரைக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இன்று தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரனை சந்தித்து அனுமதி கோரி கடிதம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே பி முனுசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக மக்கள் மனதில் உள்ள சந்தேகங்களுக்கு விடை கிடைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடைபெற்றால் ஓ.பன்னீர் செல்வம்தான் முதலில் விசாரிக்கப்படுவார் என்று சுகாதாரத்துறை செயலாளர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த முனுசாமியும், நத்தம் விஸ்வநாதனும், நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை, சி. விஜயபாஸ்கரும் விசாரிக்கப்படுவார் என்றனர்.
75 நாட்கள் மறைவாக வைக்கப்பட்டு ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எந்த நாட்டிலும் எந்த ஒரு தலைவருக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது. அதில் உள்ள மர்மத்தை வெளியே கொண்டு வரவே நீதி விசாரணை கேட்பதாக தெரிவித்தார்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர்.
என்றும் முனுசாமி தெரிவித்தார்.