சீனாவிலும் கொடுக்கிறார்கள்.. நிலவேம்பு கசாயத்தில் பக்க விளைவு கிடையாது: சுகாதாரத்துறை செயலாளர் பளிச்
நிலவேம்பு கசாயத்தால் மலட்டுத் தன்மை ஏற்படாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சேலம் : நிலவேம்பு கசாயம் குறித்து பிரபலங்களுக்கு சந்தேகம் இருந்தால் அரசு சித்த மருத்துவர்கள் மூலம் விளக்கம் அளிக்க அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் டெங்கு பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : டெங்குவிற்கு தாமதமாக சிகிச்சை எடுத்துக்கொள்வதே பாதிப்பிற்கு முக்கிய காரணம். எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு கசாயம் அளிக்கப்படுகிறது. நிலவேம்புக் கசாயம் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருந்தாகும்.
நிலவேம்புக் கசாயத்தை 1000 மில்லி கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். நிலவேம்புச் சாறை எடுத்துக் கொள்வதன் மூலம் மலட்டுத் தன்மை ஏற்படும் என்பது உண்மையல்ல.
டெங்குவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பும் தேவை. அரசின் சித்த மருத்துவத் துறை மூலம் ஆராய்ச்சி செய்த பின்னரே நோயாளிகளுக்கு நிலவேம்புக் கசாயம் வழங்கப்படுகிறது. நிலவேம்பினால் எந்த பாதிப்பும் இல்லை என்று சான்று உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளிலும் நிலவேம்பு கசாயம் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது.
பிரபலங்களுக்கு சந்தேகம் இருந்தால் அரசு சித்த மருத்துவர்கள் மூலம் விளக்கம் அளிக்க அரசு தயாராக உள்ளது. அதைவிடுத்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நிலவேம்புக் கசாயம் குறித்து ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை அதனை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை கேட்டுக் கொண்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அடுத்து கமல்ஹாசன் கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கமல்ஹாசன் அவதூறு பரப்புவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.