மருத்துவ கவுன்சிலிங்: போலி சான்றிதழ் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை... சுகாதரத்துறை செயலர் எச்சரிக்கை!
மருத்துவ கலந்தாய்வில் போலி இருப்பிட சான்றிதழ்கள் கொடுக்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
சென்னை: மருத்துவ கலந்தாய்வில் போலி இருப்பிட சான்றிதழ்களைக் கொடுக்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேற்றிலிருந்து சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடந்து வருகிறது.
இன்று பொதுப்பிரிவினருக்கு நடந்து வரும் கலந்தாய்வில் சிலர் போலியான இருப்பிட சான்றிதழ்களைக் கொடுத்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து, இதுகுறித்துப் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சான்றிதழல்களை சரி பார்ப்பதற்கென்று தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போலி இருப்பிட சான்றிதழ் வழங்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். வெளிமாநிலத்தவர் சிலர், தமிழக மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக போலி இருப்பிடச் சான்றிதழ்களை சமர்ப்பித்து மோசடி செய்து வருகின்றனர்.