முதியவர்களுக்கு சத்தான உணவு வழங்கும் பெரியவர்... நெல்லை மாவட்டத்தின் ஈரமனசு! Exclusive
முதியவர்களை கண்டு முகம் சுளிக்கும் காலத்தில், முதியவர்களுக்கு சத்தான உணவுகொடுத்து முத்தாக பாதுகாக்கிறார் பெரியவர் ஒருவர்.
தென்காசி: முதியவர்களுக்கு சத்தான உணவு தயாரித்து வழங்கும் இலஞ்சி பெரியவர் ஒன் இந்தியா வாசகர்களுக்காக பேட்டியளித்துள்ளார். சுவாரஸ்யமான அவரின் பேட்டி பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தென்காசி அருகே ஒரு ஊரில் முதியவர்களை முத்தாக பாதுகாத்திட சத்தான உணவுகளை வழங்கி, வயதானவர்களே ஒருவரை பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பேசிக்கொள்கின்றனர். இது அனைத்துத் தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றுவருகிறது.
யார் அவர்?அப்படி என்ன காரியம் செய்கிறார்? என்பதை தெரிந்து கொள்ள தென்காசியில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ள இலஞ்சி செல்லவேண்டும்.
அவரின் பெயர் துரை. தம்புராஜ் வயது 82 . திருச்சி பெல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து ஒய்வு பெற்றவர்.மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நாடுகளில் தான் பணியாற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தென்காசி மூத்த குடிமக்கள் மன்றம்
தம்புராஜ் பணி ஒய்வுக்கு பிறகு சொந்த ஊரான இலஞ்சிக்கு வந்தவர் இங்கு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தின் உறுப்பினரானார். சில காலத்திலேயே மன்றத்தின் தலைவராகவும் தேர்வானார். தலைவரான பிறகு மூத்த குடிமக்கள் சங்கத்தில் இணைந்து தனது பொன்னான பொழுதை வீணாக கழிக்க விரும்பாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட விரும்பினார். அறுபது வயதை தாண்டி நுாறு வயதை தொடப்போகும் நிலையில் உள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்தார்.
ஓய்வூதியம் பெரும் நபர்கள்
இந்த சங்கத்திலுள்ள பல உறுப்பினர்களின் குடும்ப உறவுக வெளியூர் அல்லது வெளிநாடுகளில் பணியாற்றி கொண்டு இருக்கின்றனர்.அவர்கள் பெற்றவர்களுக்கு பணம் அனுப்புகின்றனர்,இவர்களும் ஓய்வூதியம் பெறுகின்றனர்.
சகநண்பர்களுடன் திட்டம்
ஆனால் பணம் இருந்தாலும் முதுமையான நிலையில் அவர்களுக்கு சரியான நேரத்தில் சத்தான சாப்பாடு இல்லாமல் அவதிப்படுவதை உணர்ந்தார்.ஆலோசனைகள் மனசுக்குள் ஆழமாக பதியவைத்து சக நண்பர்களிடம் தனது திட்டத்தை சொன்னார்.
சிறப்பு மருத்துவ முகாம்
இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தீவிரமாக யோசித்து சென்னையில் இருந்து முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவர் நடராஜனை வரவழைத்து மூன்று நாள் மருத்துவமுகாம் நடத்தி அவர்களுக்கு எப்படிப்பட்ட உணவு வழங்கவேண்டும் என்று அறிந்துகொண்டார். காலையில் பலகாரமும் மதியம் உணவும் இரவில் பழங்களும் இருக்கவேண்டும் காலை உணவும், மதிய உணவும் எப்படி இருக்கவேண்டும் எந்த அளவிற்கு உப்பு, புளி காரம் இருக்கவேண்டும் எப்படி சமைக்கவேண்டும் என்றெல்லாம் எழுதி பட்டியலாக தந்துவிட்டார்.
மருத்துவர் ஆலோசனைப்படி உணவு
இரவு உணவிற்கான பழங்களை அவர்களே வாங்கிக் கொள்வார்கள் அதில் பிரச்னை எதுவுமில்லை . காலை மற்றும் மதிய உணவு மட்டும் மருத்துவர் சொன்னபடி உடலுக்கு ஆரோக்கியம் தரும்வகையிலும் ருசியாக இருக்கும்படியும் தருவது என முடிவு செய்தார். இதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி ஆட்களைவைத்து சமையல் செய்தார். செய்த சமையலை ஆட்டோ மூலமாக கேரியரில்வைத்து தங்களது சங்க மூத்த உறுப்பினர்களின் வீட்டிற்கே அனுப்பிவைத்தார்.
செலவு பகிர்ந்து கொள்ளல்
கடந்த 2006-ம் ஆண்டு 25 பேருடன் தொடங்கிய இந்த சேவை இப்போது சுமார் 150 பேருடன் தொய்வின்றி தொடர்கிறது சேவை .மாதத்திற்கு ஆன செலவை 150 பேருக்குமாக பிரித்துக்கொள்கிறார்கள். இது தலா ஒரு நபருக்கு 1800 ரூபாய் அளவில் வரும். காலை உணவு காலை 7.30 மணிக்கும் பகல் உணவு பகல் 11 மணிக்கும் வீடு தேடி சென்றுவிடுகிறது. ஒரு நாள் ஒரு பொழுது கூட இது தவறியது இல்லை. சூரியன் உதிக்கதவறினாலும் உணவு கொண்டு செல்லும் பணி ஒருநாளும் நின்றதில்லை.
அர்ப்பணிப்பு ஊழியர்கள்
அதே போல ஒருவர் கூட உணவில் குறை என்று இதுவரை சொன்னது இல்லை. இலஞ்சியில் மட்டுமின்றி செங்கோட்டை, குற்றாலம், மேலகரம்,ஐந்தருவி சங்கராஸ்ரமம் வரை சாப்பாடு செல்கிறது.பெரியவர்களின் மனம் நிறைந்த ஆசி கிடைப்பதால் இந்த வேலையை புனிதமாக கருதி சமையல் கலைஞர்களும் ஆட்டோ டிரைவர்களும் ஒரு ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.
உதவிக் கரம் நீட்டும் மனைவி
மேலும் பெரியவர் துரை.தம்புராஜின் இந்த சமூக பணிக்கு அவரின் துணைவியார் சண்முகவடிவு நாச்சியார் பெரும் ஊக்கமும் உற்சாகமும் தந்து உதவி வருகிறார். அதிகாலை ஐந்து மணிக்கு துரை.தம்புராஜின் பணி சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிடுகிறது. ஒரு இளைஞரின் வேகத்தோடும் விவேகத்தோடும் பல வேலைகளை பம்பரமாக சுற்றி சுற்றி வந்து பார்த்து காலை மதிய உணவை அனுப்பிவிட்டே கொஞ்சம் இளைப்பாறுகிறார். இதில் இன்னொரு விஷயம் பயனாளிகளில் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள் துரை.தம்புராஜ் தம்பதியினர்தான்.
முகாம்கள் மூலம் உதவி
உணவு விஷயத்தை தாண்டி முதியவர்களுக்கான மருத்துவமுகாம், கலந்துரையாடல், இலக்கிய கூட்டம் என்று ஏதாவது ஆரோக்கியமான விஷயங்களை நடத்தி தானும் தன்னைப்போன்ற வர்களும் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். மொத்தத்தில் முதுமையை இனிமையாக்கி கொண்டுள்ளார். மகத்தான புண்ணியத்தைதரும் இந்த நல்ல காரியத்தை யார் வேண்டுமானாலும் அவரவர் ஊரில் இருந்து செய்யலாம், செய்து பாருங்கள் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டாகும் என்று கூறுகிறார். பெரியவர் துரை.தம்புராஜ் அவரிடம் ஆலோசனை பெறவும் அவரது நலத்தொண்டினை வாழ்த்தவும் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்:9944234499.